Friday, May 28, 2010

ம் என்றால் உள்ளதடி சொர்க்கம்...


வீடெல்லாம் சுகந்த வாசம்
பூக்களங்கே சந்தனமிங்கே
ஊதுபத்தியின் நறுமணமோ
படர்ந்திருந்தது ஆங்காங்கே

ஆரவாரப் பேச்சுகளும்
ஆர்ப்பரிக்கும் உறவுகளும்
ஆட்டம் போட்டபடியாய்
ஆசைக் குழந்தைகளும்

தலையெல்லாம் தானாக
அவள்பக்கம் திரும்பிக்கொள்ள
அழகான தேவதையாய்
என்னவள் அதோ அங்கே!

உள்ளங்கையின் உள்ளுக்குள்ளே
பொக்கிஷமாய் அது!
காலம் காலமாய்
நானவளைக் கேட்டது!

நெருங்கி எந்தன் அருகில் வந்து
நெஞ்சின் மேல் அதனை வைத்து
நெற்றியிலே முத்தமிட்டு
நெகிழ வைத்தாள் அனைவரையும்

இருக்கையிலே இல்லையென்றாள்
இறந்திருக்க இதோவென்றாள் - அவள்
இமையைக் கண்ணீர் கடக்க - என்
இமைகள் மூடி மறைந்தாள்.

Labels: , , ,

0 Comments:

Post a Comment

<< Home